8 அணிகள்
இடையிலான 13-வது ஐபிஎல் 20 ஓவர்
கிரிக்கெட் போட்டி வருகிற 29-ந்தேதி
மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் தொடங்குகிறது.
முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை
இந்தியன்ஸ் அணி, சென்னை சூப்பர்
கிங்சை சந்திக்கிறது. இதையொட்டி பல வீரர்கள் இப்போதே
பயிற்சியை தொடங்கி விட்டனர்.
இந்த சீசனில் ஐபிஎல் போட்டிக்கான
பரிசுத்தொகையை இந்திய கிரிக்கெட் வாரியம்
திடீரென பாதியாக குறைத்துள்ளது. கடந்த
ஆண்டு வாகை சூடிய அணிக்கு
பரிசுக்கோப்பையுடன் ரூ.20 கோடி வழங்கப்பட்டது.
50 சதவீதம் குறைவு காரணமாக இந்த
முறை சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்கு ரூ.10 கோடி
மட்டுமே கிடைக்கும். இதே போல் 2-வது
இடத்தை பிடிக்கும் அணிக்கான பரிசுத்தொகை ரூ.12.5 கோடியில் இருந்து
ரூ.6.25 கோடியாக குறைகிறது.
தலா ரூ.8.75 கோடியை பரிசுத்தொகையாக
பெற்ற 3-வது மற்றும் 4-வது
இடத்தை பிடிக்கும் அணிகள் இந்த ஆண்டு
தலா ரூ.4 கோடியே 37 லட்சத்தை
பெறுவார்கள்.
உலகின்
பணக்கார கிரிக்கெட் அமைப்பான இந்திய கிரிக்கெட் வாரியம்,
ஐபிஎல் உதயமான பிறகு எடுத்த,
முதல் மிகப்பெரிய சிக்கன நடவடிக்கையாக இது
கருதப்படுகிறது. முந்தைய ஆண்டை போன்றே
இந்த முறையும் ஐபிஎல் தொடக்க விழா
கலைநிகழ்ச்சிகள் எதுவும் கிடையாது.
மேலும்
செலவினத்தை குறைக்கும் வகையில் 8 மணி நேரத்திற்குள்ளாக பயணிக்கக்கூடிய
வெளிநாட்டு கிரிக்கெட் தொடர்களுக்காக (இலங்கை, வங்காளதேசம், ஐக்கிய
அரபு அமீரகம் போன்ற தொடர்கள்)
இந்திய கிரிக்கெட் வாரிய ஊழியர்கள் விமானத்தில்
செல்லும்போது இனி சொகுசு வகுப்பு
பிரிவை பயன்படுத்த அனுமதிக்கப்படமாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதே சமயம் ஒவ்வொரு ஐபிஎல்
ஆட்டத்தை நடத்துவதற்கும் மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு
சம்பந்தப்பட்ட அணியின் உரிமையாளர்கள் ரூ.30
லட்சம் கொடுக்க வேண்டும் என்று
இருந்ததை ரூ.50 லட்சமாக கிரிக்கெட்
வாரியம் உயர்த்தியுள்ளது.
மைதானத்தை
பயன்படுத்தும் ஒப்பந்தப்படி கிரிக்கெட் வாரியமும் தனது பங்களிப்பாக ரூ.50
லட்சத்தை வழங்கும். ஆக, ஒவ்வொரு ஆட்டத்தை
மிகச்சிறப்பான முறையில் நடத்துவதற்கு மாநில கிரிக்கெட் சங்கங்கள்
ரூ.1 கோடியை பெற உள்ளன.
இந்திய
கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் கூறுகையில்,
‘‘ஒவ்வொரு அணிகளும் பொருளாதார ரீதியாக நல்ல நிலையில்
உள்ளன. ஸ்பான்சர்ஷிப் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் அவர்களுக்கு
வருமானம் கிடைக்கிறது. எனவே பரிசுத்தொகையை குறைத்துள்ளோம்’’
என்றனர்.
வெற்றிபெறும்
அணிக்கு கிடைக்கும் பரிசுத்தொகையில் பாதித் தொகை அணியின்
உரிமையாளருக்கும், மீதம் வீரர்களுக்கும் பகிர்ந்து
அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
சிக்கன
நடவடிக்கை குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம்
8 அணிகளின் உரிமையாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. எதிர்பாராத
பரிசுத்தொகை குறைப்பால் அணிகளின் உரிமையாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இத குறித்து தென்இந்தியாவைச் சேர்ந்த ஐபிஎல் அணியின்
நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘‘பிளே-ஆப் சுற்றுக்கான பரிசுத்தொகை
பாதியாக குறைக்கப்பட்டது எங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை. இதுகுறித்து எங்களிடம் விவாதிக்கக்கூட இல்லை. இந்த விவகாரம்
குறித்து அணிகளின் உரிமையாளர்கள் விரைவில் கலந்து ஆலோசிக்க இருக்கிறோம்’’
என்றார்.
0 Comments